தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணி-க்கு 1021 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில்,
அதில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப் படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில்..,
“மருத்துவர் பணி-யில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு தமிழக அரசின் சார்பில் கூறப்படும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக 1021 மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை,
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
அவற்றில் 75 பின்னடைவுப் பணியிடங்கள் தவிர மீதமுள்ள 946 இடங்களில் 20% இடங்கள், அதாவது 178 இடங்கள் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் எவரும் இல்லை என்பதால்,
அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. இதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு ஆங்கில வழியில் மட்டும் தான் கற்பிக்கப்படுகிறது; தமிழ்வழியில் கற்பிக்கப் படவில்லை.
இந்த எதார்த்தத்தை உணராமல், மருத்துவப் படிப்பை தமிழில் படிக்கவில்லை என்று கூறி, மருத்துவர் பணி நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இது நியாயமல்ல.
மருத்துவப் படிப்பு மட்டுமின்றி, பல்வேறு பட்ட மேற்படிப்புகளும் ஆங்கிலத்தில் மட்டும் தான் கற்பிக்கப் படுகின்றன.
அதனால், அந்தப் படிப்புகளை கல்வித்தகுதியாகக் கொண்ட பணிகளுக்கும் தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான்.
மருத்துவப் படிப்பும், பட்ட மேற்படிப்பும் தமிழ் வழியில் இருந்திருந்தால், பள்ளிக்கல்வியை தமிழில் படித்தவர்கள், அவற்றையும் தமிழ்வழியில் தான் படித்திருப்பார்கள்.
அந்தப் படிப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படாதது அரசின் பிழை தானே தவிர, அவர்களின் பிழை அல்ல. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் சரியானதாகவும், சமூகநீதியாகவும் இருக்கும்.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேருபவர்களில் 90% பேர் தமிழ் வழியில் படித்தவர்கள்.
அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இல்லாத தமிழ்வழி மருத்துவப் படிப்பை தமிழ்வழியில் படிக்கவில்லை என்று கூறி இட ஒதுக்கீட்டை மறுப்பது நீதியாகாது.
எனவே, மருத்துவப் படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்ற ஆங்கிலவழியில் மட்டும் கற்பிக்கப்படும் படிப்புகளை கல்வித்தகுதியாகக் கொண்ட பணிகளுக்கு,
அப்படிப்புக்கு முந்தைய நிலைவரை உள்ள படிப்புகளை தமிழ்வழியில் படித்திருந்தாலே அவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.
அதற்கேற்ற வகையில் தமிழ்வழிக் கல்விக்கான 20% இட ஒதுக்கீட்டு சட்டத்தில் அரசு திருத்தம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.