Site icon itamiltv.com

தவெகவின் முதல் மாநிலங்களவை எம்.பி யார்? அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு!

அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கு ஜூன் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மயிலம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற அவர், கடந்த மே 7 ஆம் தேதி தனது மாநிலங்களவை பதவியை விலக்கிக் கொண்டார்.

இதுபோல மகாராஷ்டிராவில் சுநேத்ரா பவாரும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததால், அந்த இடத்திற்கும் அதே நாளில் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

மேலும், 10 மாநிலங்களைச் சேர்ந்த 24 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும் விரைவில் முடிவடைய உள்ளது. கர்நாடகாவில் மல்லிகார்ஜுன் கார்கே, தேவகவுடா உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பதவிக்காலமும் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதால், காலியாகும் மாநிலங்களவை இடத்தை தவெக கைப்பற்றி நாடாளுமன்ற அரசியலில் தனது முதல் அடியை எடுத்து வைக்கும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version