முந்தைய அரசு அறிமுகப்படுத்திய மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், மே மாதத்திற்கான ரூ.1000 தொகையை தற்போதைய தவெக அரசு ஒரு கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தத் திட்டம் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது தவெக தலைவர் விஜய், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என்றும், வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு ரூ.4000 உதவி தொகை வழங்கப்படும் என்றும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மகளிருக்கு ரூ.2500 வழங்கும் திட்டத்தில் உடனடி மாற்றம் செய்யாமல், முதலில் 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட சில திட்டங்களுக்கு கையெழுத்திட்டார். இருப்பினும், முந்தைய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று அவர் உறுதி அளித்தார்.
இந்த நிலையில், அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைத்து தாய்மார்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறினார். ஆனால் அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

