பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ள எண்ணெய் நிறுவனங்களின் முடிவை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். ஆனால் விலை உயர்த்தும் போது மட்டும் அதனை உடனடியாக அமல்படுத்தி அதிக லாபம் ஈட்டுகின்றன என்றும் கூறினார்.
மேலும், ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த உடனே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார். இந்த உயர்வு இருசக்கர வாகனம் மற்றும் சிறிய வாகனங்களை பயன்படுத்தும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் குடும்பச் செலவுகளை அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.
வங்கிக் கடன் பெற்று வாகனங்களை வாடகைக்கு இயக்கும் ஓட்டுநர்களும் கூடுதல் நிதிச்சுமையை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக வாடகை வாகன கட்டணமும் உயர வாய்ப்பு உள்ளது. அதனால் அன்றாட பொருட்களின் விலையும் அதிகரித்து, மக்களின் வாங்கும் திறன் குறையும் அபாயம் உள்ளது.
எனவே பொதுமக்கள் மற்றும் குறு சிறு தொழில்களை பாதிக்கும் இந்த பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

