செங்குன்றம் அருகே குமரவேல் என்பவருக்கு சொந்தமான குடோனில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னையைச் சேர்ந்த குமரவேல் என்பவருக்கு சொந்தமான குடோன் ஒன்று செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பாலவாயில் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த குடோனில் மருந்து பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைக்கப்பட்டு, இங்கிருந்து சென்னை முழுவதும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடோனில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பற்றி எரிவதை பார்த்து உடனடியாக தீ அணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த தகவலை அடுத்து விரைந்து வந்த செங்குன்றம், மாதவரம், அம்பத்தூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி குடோனில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையானதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.