நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் (chavku shankar) இன்று விடுதலை செய்யப்பட்டார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஒரு பேட்டியில் சவுக்கு சங்கர் உயர் நீதித்துறை முழுவதும் ஊழலில் சிக்கியுள்ளது என்று கூறியிருந்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது மதுரை உயர்நீதிமன்றம்.
தொடர்ந்து, இது குறித்து விசாரணை செய்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு சவுக்கு சங்கர் (chavku shankar) நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக கூறி அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டததையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு கடந்த 11-ம் தேதி விசாரித்தது.
அப்போது, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், சிறையில் இருந்து வெளியே வந்தபின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
இதையடுத்து சவுக்கு சங்கர் விடுதலையாவார் என்று கருதப்பட்ட நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் பிரிவு காவல்துறை கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளில் சவுக்கு சங்கரை மீண்டும் கடந்த 11-ஆம் கைது செய்தது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 4 வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கருக்கு சென்னை எழுப்பூர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
மேலும், வழக்கு குறித்து வெளியில் எங்கும் பேசக்கூடாது என நிபந்தனை வழங்கியும் உத்தரவிட்டது. இந்த நிலையில் கடலூர் மத்திய சிறையில் இருந்து சவுக்கு சங்கர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்