சென்னையில் நாளை இரவு 12 மணிக்கு மேல் அத்தியாவசிய போக்குவரத்தை தவிர மற்ற வாகனங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட மற்றுமொறு புதிய வகை கொரோனாவன ஒமைக்ரான் வைரஸ் 100 ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மீண்டும் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவும், உருமாறிய ஒமிக்ரான் மேலும் பரவாமல் இருக்கவும் தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட காவல்துறை தடை விதித்துள்ளது.
அத்துடன் புத்தாண்டில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 31ம் தேதி இரவு 12 மணியில் இருந்து ஜனவரி 1ம் தேதி அதிகாலை 5 மணி வரை அத்தியாவசிய வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மேலும் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக தெரிவித்துள்ள, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எனவே பொதுமக்கள் அனைவரும் 31ஆம் தேதி அன்று இரவு 12 மணிக்கு முன்பே தங்கள் பயணத்தை முடித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.