“தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி 122 வட்டம், வாக்குச்சாவடி எண் :13 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தினரால் வாக்குச்சாவடி கைப்பற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் தென்சென்னை தேர்தல் அதிகாரியை சந்தித்து அந்த வாக்குச்சாவடியில்
மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டுமென்று தமிழிசை சௌந்தரராஜன் மனு அளித்திருந்தார்.
இந்த நிலையில் தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியீட்டுக்குள்ள அறிக்கையில் “தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், வாய்ப்பறை கொட்டிய கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் புதுப்புது வாதங்களைக் கூறி, ‘ஒப்பாரி’ வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.
இதையும் படிங்க: தேர்தல் விடுமுறையை கொண்டாடும் மக்கள் – வருத்தம் தெரிவித்த தமிழிசை
குற்றம் சுமத்தி, தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகளே, உங்களுக்கு ஒரே கேள்வி! தேர்தல் ஆணையம் யாருடைய அதிகாரத்தின்கீழ்? ஒன்றிய அரசின்கீழா? அல்லது மாநில அரசின் கீழ் இயங்குகிறதா? இந்தியாவில் மூன்று தேர்தல் ஆணையர்களையும் நியமித்தது யார்? முன்பே நீங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களிடம் இதுபற்றி பகிரங்கமாகப் பேசினீர்களா?
அறிஞர் அண்ணாவின் எழுத்தோவியத் தலைப்புதான் நினைவிற்கு வருகிறது. ‘‘ஆரம்பத்தில் ‘அடானா’ (மகிழ்ச்சி ராகம்), முடிவில் ‘முகாரி’ (துன்பப் பாட்டு).’’ தோல்விக்கு முன்னுரை பாடுவதாகவே விவரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அந்தோ பரிதாபம்! இதற்கேது மக்கள் அனுதாபம்?” என்று குறிப்பிட்டுள்ளார் .