தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தனது சேவைகளை மேம்படுத்தும் பணிகளுக்காக சில பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மின் தொடர்பான ஆன்லைன் மற்றும் கவுண்டர் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு வேகமான மற்றும் சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில், தாழ்வழுத்த (LT) பில்லிங் மென்பொருள் புதிய சர்வர்களுக்கும் புதிய தரவுத்தளத்திற்கும் மாற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அடையார், ஐ.டி காரிடார், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், கே.கே.நகர், போரூர், கிண்டி, அண்ணாநகர், அம்பத்தூர் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மின் கட்டண வசூல் தொடர்பான ஆன்லைன் மற்றும் கவுண்டர் சேவைகள், புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் ஆகியவை தற்காலிகமாக இயங்காது.
இந்த சேவைகள் மே 23 ஆம் தேதி நள்ளிரவு முதல் மே 24 ஆம் தேதி இரவு வரை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் அனைத்து சேவைகளும் மீண்டும் வழக்கம்போல் செயல்படும் என்றும், பொதுமக்கள் தேவையான பணிகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறும் மின் பகிர்மானக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

