வரும் 18 ஆம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்ந்துக் கொள்ளலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்து உள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் திறக்கப்பட்டு உள்ளன. அத்துடன் கல்லூரி விடுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அதன்படி நூலகத்தில் கூட்டம் கூடவோ, கல்லூரியில் விழாக்கள், கூட்டங்கள் நடத்தவும் அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களிடமிருந்து எந்தவித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசிய மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு:
மருத்துவக் கல்லூரியில் சேர இன்று கடைசி நாள் அல்ல. பெற்றோர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் பிப்ரவரி 16 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 18 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் மருத்துவக் கல்லூரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது பற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களில் 544 மாணவர்களில் 541 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர் என்றும் தெரிவித்தார்.