உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்கள் இந்திய கல்லூரிகளில் படிப்பைத் தொடர முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் உக்ரைன் நாட்டில் தங்கியிருந்து படித்து வந்தார்கள். உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக அந்த மாணவர்கள் இந்தியா திரும்பினர். போர் காரணமாக நாடு திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களை இந்திய கல்லூரிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி குறித்த கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதில் உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள் இந்திய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்கள் படிப்பைத் தொடர விதிகளில் இடமில்லை. உக்ரைன் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் மாணவர்கள் இந்தியாவில் சேர முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டம் 1956 மற்றும் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019ன் விதிமுறைகளில் எந்தவொரு வெளிநாட்டு மருத்துவ நிறுவனங்களிலிருந்தும் மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு மாற்றுவதற்கான விதிகள் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவ பல்கலைக் கழகங்களில், வெளிநாடுகளில் இருந்து வந்த மாணவர்களை சேர்ப்பதற்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. அதே நேரத்தில் மற்ற வெளிநாட்டு கல்லூரிகளில் அவர்கள் படிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கான முயற்சிகளை இந்திய வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சரின் இந்த பதில் உக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து படிப்பைத் தொடர முடியாமல் திரும்பிய மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.