ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயங்களுடன் மீட்கபட்டு கமாண்டோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.
தமிழ்நாடு நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் மலைப்பாதையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 ராணுவ உயரதிகாரிகளுடன் சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் கடந்த 8 ஆம் தேதி விபத்துக்கு உள்ளாகியது.
இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் மரணம் அடைந்த நிலையில் அவர்களது உடல்கள் அடையாளம் காணப்பட்டு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்தவிபத்தில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண்சிங், குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கடந்த 9-ந் தேதி மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள கமாண்டோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வருண்சிங் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்றும், அதே நேரத்தில் அவரது முக்கியமான உடல் உறுப்புகள் இயல்பாக செயல்பட்டு வருவதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கமாண்டோ மருத்துவ மனைக்கு நேரில் சென்று வருண் சிங்கின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயங்களுடன் மீட்கபட்டு கமாண்டோ மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்த வருண்சிங், சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.