நாடாளுமன்ற மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த மசோதா மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மத்திய அரசு மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது உள்ள 543 மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்கான தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பேசிய ராகுல் காந்தி, இது மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தேர்தல் வரைபடத்தை மாற்றும் முயற்சி என விமர்சித்தார்.
மேலும், ஓபிசி மற்றும் பட்டியலின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இந்த மசோதா நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
தென் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், இந்த மசோதாவை கண்டிப்பாக தோற்கடிப்போம் என்றும் அவர் உறுதியாக கூறினார்.

