டெல்லி ஜே.என்.யு. பல்கலைகழகத்தில் தமிழக மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியத்திற்குஆளும் அதிகார வர்க்கத்தின் பின்னால் மறைந்து கொண்டு கோழைத்தனமாக வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தலைநகர் டெல்லியில் உள்ள ஜே.என்.யு. பல்கலைக் கழகத்தில் பயிலும் தமிழக மாணவர்கள், நேற்று ரிசர்வேசன் கிளப்’ என்ற பெயரில் பெரியாரின் கருத்துகள் தொடர்பான கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியபோது, அரங்கிற்கு வந்த ஏபிவிபி அமைப்பினர் அங்கிருந்த தந்தை பெரியார் மற்றும் மார்க்சிய சிந்தனைத் தலைவர்களின் படத்தையும் பொருட்களையும் சேதப்படுத்தியதோடு, தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மீதும் வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் தமிழக் மாணவர் ஒருவருக்கு தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காயம் அடைத்த மாணவர்கள் சிலரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இத்தகைய திட்டமிட்ட வன்முறைத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகமும், டெல்லி காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கல்வி மட்டுமின்றி, சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட புரட்சிகர சிந்தனைகள் வளர்தெடுப்பதில் முன்னணியில் திகழ்ந்த டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை மிகமோசமானதாக மாறியுள்ளது. 2014ம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசு அமைந்தது முதல் கல்விநிலையங்களில் கருத்துச் சுதந்திரம் மற்றும் புரட்சிகர சிந்தனைகள் மேலோங்குவது வன்முறையின் மூலம் திட்டமிட்டு தடுக்கப்பட்டு வருகின்றது.
ஆளும் அதிகார வர்க்கத்தின் பின்னால் மறைந்துகொண்டு கோழைத்தனமாக ஏபிவிபி என்ற வன்முறைக் கும்பல் கருத்துத் சுதந்திரத்தை நசுக்கி வருவதோடு, மாணவர்கள் மீதும் அவ்வப்போது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. அந்த வரிசையில் நேற்று தமிழக மாணவர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் வெளிமாநிலங்களில் தமிழர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல் தொடரும் பட்சத்தில் அது மிகப்பெரும் அசம்பாவிதமாகிவிடும் என்பதால், தமிழக அரசு சிறப்புக்குழுவை அமைத்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு, கைது செய்து தமிழக சிறையில் அடைத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இத்தகைய வன்முறை போக்கை ஏபிவிபி தொடரும் பட்சத்தில், தமிழகத்தில் ஏபிவிபி-க்கு எதிராக போராடும் சூழல் உருவாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்வதோடு, தமிழக அரசு, காயம்பட்ட தமிழக மாணவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்