ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. என்னதான் இவரின் ஒரு சில படங்கள் வெற்றிபெற தவறினாலும் இவரின் நடிப்பால் ரசிகர்களிடம் ஸ்கோர் செய்து விடுவார். முதலில் சாக்லேட் பாயாக நடித்து வந்த ஜெயம் ரவி பேராண்மை படத்தின் மூலம் ஆக்ஷன் அவதாரம் எடுத்தார்.
இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வனின் பிரமாண்ட வெற்றிக்கு பின் தற்போது இறைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்த 2015 இல் வெளியான தனி ஒருவன் படத்திற்கு பிறகு, இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அஹ்மத் இயக்கியுள்ள இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையில், ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாக இருந்த சூழ்நிலையில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் செப்டம்பர் 28ஆம் தேதி இறைவன் திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இறைவன் திரைப்படம் A சான்றீதழ் பெற்ற படம் என்பதால் இப்படத்திற்கு குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என செய்தியாளர் சந்திப்பில் ஜெயம் ரவியே கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.