மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் 21 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
தங்க, வைர, வெள்ளி நகைகள் மற்றும் நிலப்பத்திரங்களை வரும் பிப்ரவரி 14, 15 தேதிகளில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அன்றைய தினம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பெட்டிகளுடன் வர வேண்டும் எனவும் அதற்காக உரிய வாகன, பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : குற்றம் செய்ய தி.மு.க. கொடி தான் லைசென்சா? – இ.பி.எஸ் காட்டம்..!!
பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1996ம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் போது இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2004ல் சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டது .
இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அவைகள் விரைவில் தமிழகம் வர உள்ளது.