அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான நில மோசடி வழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில் கரூரில் இன்று சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம், மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர், போலி சான்றிதழ் கொடுத்து ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தன்னை மிரட்டி பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.
இதையடுத்து பிரகாஷ் என்பவர் தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிரட்டி பத்திரப்பதிவு செய்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
Also Read : திடீரென இடிந்து விழுந்த வீட்டின் பால்கனி – பூ வியாபாரி உயிரிழப்பு..!!
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் தேடி வரும் நிலையில் தற்போது கரூரில் 4 பேர் வீடுகளில் சிபிசிஐடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைதாகி விடக்கூடாது என்பதற்காக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்துகொண்டு முன் ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ள நிலையில் கரூரில் உள்ள யுவராஜ், ரகு, செல்வராஜ் மற்றும் மாரப்பன் ஆகியோரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீது பல மோசடி வழக்குகள் குவிந்து வரும் நிலையில் அவர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் தற்போது ஏமாற்றத்திலும் கோபத்திலும் இருந்து வருகின்றனர்.