தற்போதைய காலகட்டத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் (Live-In Relationship) என சொல்லிக்கொண்டு ஒரே வீட்டில் வசித்து வருவது பெருகிவிட்டது.
இந்நிலையில், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் அது குறித்து பதிவு செய்ய வேண்டும் என்று உத்தராகண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது சிவில் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வரும் சூழலில், இதற்கான பணிகளை சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க : நாய்க்கும் ஆதரவாளருக்கும் ஒரே பிஸ்கெட்டா..? – ராகுல் மீது தாக்கு!!
அந்த வகையில், சுதந்திர இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தராகண்ட் தனது சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு இன்று காலை சட்டப் பேரவைக்கு வருகை தந்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இந்திய அரசியல் சாசனத்தின் ஒரு பிரதியை கைகளில் ஏந்தியவாறு வந்தார்.
அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, ஆளும் கட்சி எம்எல்ஏ-க்கள் தங்கள் முன் இருந்த மேசைகளைத் தட்டி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்றும் ‘வந்தே மாதரம்’ என்றும் கோஷங்களை எழுப்பி தங்களுடைய ஆதரவை வெளிப்படுத்தினர்.
பின்னர், இந்த மசோதா குறித்து விவாதிக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் பொது சிவில் சட்டம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே நடைமுறையில் உள்ளது. அங்கு போர்ச்சுக்கீசியர்களின் ஆட்சிக் காலத்தில் பொது சிவில் சட்டம் தொடங்கப்பட்டது. அந்த நடைமுறை தான் தொடர்ந்து தற்போதும் அமலில் உள்ளது.
சுதந்திரத்துக்குப் பிறகு உத்தராகண்ட்டில் பொது சிவில் சட்ட மசோதா முதல்முறையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருமணம், விவாகரத்து, நில உரிமை, வாரிசு உரிமை, தத்தெடுத்தல் ஆகியவை தொடர்பான சட்டங்கள் அனைத்து மதத்தவர்களுக்கும் பொதுவானதாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மசோதாவில் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் (Live-In Relationship) சேர்ந்து வாழ்பவர்கள், அது குறித்து பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்கள் ஒரு மாதத்துக்குள் தங்கள் ஒன்றாக வாழ்வதை பதிவு செய்ய வேண்டும் என்றும்,
அவ்வாறு செய்யத் தவறினால் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் சட்டபூர்வமானதாகக் கருதப்படும் என்றும் அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.