மத்தியப் பிரதேசத்தில் தலைமுறை தலைமுறையாக குல தெய்வமாக டைனோசர் முட்டைகளை வைத்து வழிபட்டு வந்தது வியப்ப ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் பட்லியா என்ற கிராமத்தைச் சேர்ந்த வெஸ்டா மண்டலோய் என்பவரது குடும்பத்தினர், தங்கள் தோட்டத்தில் இருந்த வெள்ளை கல் உருண்டைகளை தலைமுறை தலைமுறையாக குலத் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்.
அவர்களை போலவே இன்னும் சில குடும்பத்தினரும் தங்கள் நிலத்தில் இருந்த வெள்ளை கல் உருண்டைகளை, ககர் பைரவ் என்னும் தங்கள் நிலத்தை பாதுகாக்கும் காவலராக வழிபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது அந்த கல் உருண்டைகள் அனைத்தும் டைனோசர் முட்டைகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்குச் சென்ற லக்னோவின் சாஹ்னி இன்ஸ்டிடியூட் ஆஃப் பேலியோ சயின்சஸ் நிபுணர்கள் ஆய்வு செய்த போது, அவை சுமார் 7 கோடி ஆண்டுகளுக்கு பழமையானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் முடிவில் அங்கிருந்த டைனோசர் முட்டைகள் டைட்டானிக் பல்லிகள் எனப்படும் கிரெட்டேசியஸ் காலத்து டைனோசர்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த டைனோசர் முட்டைகளின் புதைப்படிமங்கள் இந்தியாவில் முதன்முறையாக 1877 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் நர்மதா பள்ளத்தாக்கை சுற்றி சுமார் 250க்கும் மேற்பட்ட டைனோசர் முட்டை புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், மத்தியபிரதேச மக்கள் டைனோசர் முட்டைகளை குலத்தெய்வமாக வழிபட்டு வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.