நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும், மாணவர்களின் சிரமத்தை தடுக்க ஆதரவு தரவேண்டும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்விற்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நீட் தேர்வின் அச்சம் காரணமாக அரியலூர் மாவட்டம் அணிதாவில் தொடங்கி சேலம் மாவட்டம் தனுஷ் வரை ஏறத்தாழ 10 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும்,அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்விற்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வு நடந்து முடிந்த சில நாட்களிலேயே நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலைகள் தொடர்கதையானது.
இதனை கருத்தில் கொண்டு தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய அளவிலும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் 12 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “நீட் தேர்வை அறிமுகப்படுத்தும் மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது, மருத்துவ நிறுவனங்ககளில் சேர்க்கை முறையை முடிவு செய்யும் மாநில உரிமையை பறிப்பதால் அரசியல் அமைப்பின் அதிகார சமநிலை மீறப்படுகிறது. மாணவர்களின் சிரமத்தை தடுக்க ஆதரவு தரவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.