12 ஆம் வகுப்பு பயின்று வந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவி பூச்சி மருந்து குடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் எரவாரி கிராமத்தை சேர்ந்தவர் ரவி. விவசாயியான இவரது மகள் அருகாமையில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வில் பங்கேற்ற இவர் 250 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அதிக மதிப்பெண் பெறாத காரணத்தினால் மன உளைச்சலில் இருந்து வந்த இவர் கடந்தவாரம் பூச்சி மருந்து குடித்ததாக கூறப்படுகிறது. விஷம் அருந்தியதை பெற்றோரிடம் மறைத்து வந்த மாணவி சில நாட்களாக வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் அருகில் இருந்த மருத்துவமனையில் மாணவியை அனுமதித்துள்ளனர். இந்நிலையில், வயிற்று வலி மேலும் அதிகமாகவே மேல் சிகிச்சைக்காக, மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை மாணவி உயிரிழந்தார்.
இந்த விபரீத முடிவை எடுக்க நீட் தேர்வு மதிப்பெண் தான் காரணமா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.