நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் பலமுறை நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டது. நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில்,நேற்று இரவு 11.30 மணியளவில் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்தது. 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக நேபாள ராணுவம் மற்றும் நேபாள காவல்துறை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லி, பீகார், பாட்னா உள்ளிட்ட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.