தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை தீயணைப்பு ஆணைய தலைவராக நியமணம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கர் ஜிவால் கடந்த 2023 ஜூன் 30-ஆம் தேதி பதவியேற்றார். அவரின் பதவிக்காலம் ஆக. 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆக.30, 31 ஆகிய நாள்கள் விடுமுறை என்பதால் சங்கர் ஜிவால் வெள்ளிக்கிழமையுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
இந்த நிலையில், அவருக்கு தீயணைப்பு ஆணையத் தலைவராகப் பதவி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் தீராஜ்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தீயணைப்பு ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு கடந்த 2022-ம் ஆண்டில் அறிவித்திருந்தது. தீத்தடுப்பு முறைகளை புதுமைகளை புகுத்தவும், தொழில்நுட்பங்களை ஏற்படுத்தவும், புதிய பயிற்சிகளை அளிக்கவும், புதிய தட்டங்களை வழங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, புதிதாக தீயணைப்பு ஆணையம் உருவாக்கப்பட்டு அதில் சங்கர் ஜிவாலுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 35 ஆண்டு கால காவல் துறை அனுபவத்தில் அவர் சிறப்பாக பணி செய்துள்ள சங்கர் ஜிவாலின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.
தீயணைப்பு துறைக்கு தேவையான காலத்துக்கு ஏற்ப மேம்பட்ட நவீன உபகரணங்கள், கருவிகள் வாங்குவது தொடர்பாகவும் இந்த ஆணையம் ஆலோசனைகள் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.