கலெக்டர் ஆவதே தனது லட்சியம் என்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த கமுதி மாணவி காவியஜனனி கூறியுள்ளார்.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மாணவி காவிய ஜனனி 500க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.
தமிழில் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 என 500க்கு 499 மார்க் எடுத்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார் மாணவி காவிய ஜனனி.
கமுதி அடுத்துள்ள பேரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தர்மராஜ் – வசந்தி தம்பதியின் மகள்தான் காவிஜனனி.
கமுதியில் உள்ள ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தவர் இன்று சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
இதனைதொடர்ந்து, மாணவிக்கு பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பள்ளியின் கல்விச் சங்கத்தின் தலைவர் அப்துல்லா, நிர்வாக அலுவலர் முஹம்மது இர்ஷாத், தாளாளர் ஆயிஷா பீவி, முதல்வர் – ஆசிரியை சர்மிளா மற்றும் வகுப்பு ஆசிரியர்கள் மாணவியை வாழ்த்தி பாராட்டினர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியின் அலுவலக பணியாளர்கள் மாணவ, மாணவிகளுக்கும் காவிய ஜனனிக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, தன்னுடைய படிப்புக்கு உதவிய பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருக்கு மாணவி காவிய ஜனனி தனது மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் 12 ஆம் வகுப்பில் இதேபோன்று அதிக மதிப்பெண் எடுத்து கலெக்டர் ஆவதே எனது லட்சியம் எனவும் அவர் தெரிவித்தார்.
மாணவியின் தாயார் வசந்தியும் தன் மகளின் வெற்றிக்கு உதவிய பள்ளியின் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிதெரிவித்தார். காவிய ஜனனி விரும்புவதைப் போல ஐ.ஏ.எஸ். படிக்க வைப்பேன். மகளின் ஆசையை நிறைவேற்றுவதே தன்னுடைய ஆசை எனவும் உவகை தெரிவித்தார்.
இதையும் படிங்க: யானை வழித்தட வரைவு அறிக்கை – எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!