விழுப்புரம் அதிமுக அலுவலகம் மற்றும் சாலை நடுவே உள்ள தடுப்பு சுவர்களில் இடம் பெற்றிருந்த ஓ.பி.எஸ் பெயர் மற்றும் படங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
அதிமுக-வில் பதவிச்சண்டை முற்றியுள்ளது. நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுக்குழு தொடங்கிய முதலே, ஜெயக்குமார், வளர்மதி, கேபி முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிச்சாமியை புகழ்ந்து பேசினர். ஆனால் அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரை கூட அவர்கள் உச்சரிக்கவில்லை.
பிறகு, பொதுக்குழுவில் நிறைவேற்றபடவிருந்த 23 தீர்மானங்களையும், பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டதாக சிவி சண்முகம் மைக்கை பிடுங்கி ஆவேசமாக கத்தினார். பிறகு கே.பி முனுசாமியும் பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானங்களை நிராகரித்துவிட்டதாகவும் அவர்கள் கேட்கும் ஒரே தீர்மானம் ஒற்றைத் தலைமை தான் எனவும் பேசினார்.
இதனையடுத்து அரங்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் ஓ பன்னீர்செல்வத்தை வெளியேறுமாறு ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர் கோஷங்களை எழுப்பி வந்தனர். ஒருகட்டத்தில், ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோ அரங்கத்தை விட்டு வெளியேறினர்.
வெளியேறும்போது வைத்திலிங்கம் சட்டத்திற்கு புறமான கூட்டம் இது என மைக்கில் பேசிவிட்டு கோஷமிட்டவாரு வெளியே சென்றனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசி தாக்கினர். ஓபிஎஸ் வந்த பிரச்சார வாகனமும் பஞ்சராக்கப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு அவமானங்களுக்கு மத்தியில், கனத்த மனதோடு வெளியேறினார் ஓபிஎஸ். தர்மயுத்தம் நடத்தியவருக்கா இந்த நிலைமை? என பொதுமக்கள் மத்தியில் ஒருவித அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம்.
இந்த சூழலில் சி.வி.சண்முகத்தின் மாவட்டமான விழுப்புரத்தில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ள பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களில் ஓபிஎஸ்-ன் பெயர் மற்றும் புகைப்படங்களை சிவி சண்முகம் ஆதரவாளர்கள் வெள்ளை பெயிண்ட் அடித்து மறைத்துள்ளனர்.
ஏற்கனவே நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஆக்ரோஷமாக பேசிய சிவிசண்முகம், இன்று ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது என பேட்டியளித்து சர்ச்சையாகியிருக்கும் நிலையில், அவரது மாவட்டத்தில், ஓபிஎஸ் புகைப்படங்கள் அழிக்கப்பட்டிருப்பதை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.