தருமபுரி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க்கில் தண்ணீர் கலந்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், தடங்கம் என்னும் பகுதியில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இங்கு வாடிக்கையாளர் ஒருவர் தண்ணீர் பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளார். அப்போது, பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து பங்கிலிருந்த ஊழியர்களிடம் கேட்டபோது, ஊழியருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தற்காலிகமாக பெட்ரோல் பங்கிற்கு போலிஸார் பூட்டு போட்டனர்.
இது குறித்துப் பேசிய பெட்ரோல் பங்க் உரிமையாளர்,”அண்மையில் பெய்த மழைநீர் பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் கலந்திருக்கலாம். இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே பெட்ரோல் பங்க் திறக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
அண்மையில்தான் திண்டிவனத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது தருமபுரியிலும் தண்ணீர் கலந்து பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.