பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நல குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 78
பழம்பெரும் பரத நாட்டிய ஆசிரியர் வழுவுர் பி. இராமையா பிள்ளையின் இளைய மகன் மாணிக்க விநாயகம். தமிழ் சினிமாவில் தனித்துவமிக்க காந்தக் குரலினால் ரசிகர்களை ஈர்க்கும் வல்லமை படைத்த இவர் சுமார் 800-க்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.
நாட்டுப்புற இசை பாடகராக இரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்த மாணிக்க விநாயகம், முதன் முதலில் 2001ம் ஆண்டு விக்ரம் நடித்த ‘தில்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணுக்குள்ளே கெளுத்தி வச்சிருக்கா சிறுக்கி’ என்ற பாடலைப் பாடி தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இதையடுத்து தமிழ் சினிமாவில் பல வெற்றி பாடல்களைப் பாடியுள்ளார்.
ஏராளமான பக்திப் பாடல்களை பாடி இசையமைத்துள்ளதோடு ஈழத்து பாடல்களும் பல பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது பிற தென்னிந்திய மொழி திரைப் படங்களிலும் பாடியுள்ள மாணிக்க விநாயகம், பல தமிழ் படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.
தனுஷ் நாயாகனாக நடித்த திருடா திருடி, விஜய் நாயகனாக நடித்த வேட்டைக்காரன் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ள மாணிக்க விநாயகம் சிறந்த பாடகராக மட்டும் அல்லாமல் சிறந்த நடிராகவும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்துள்ளார்.
திரையிசை பின்னணி பாடகர், நடிகர் என பன்முக திறன் கொண்ட மாணிக்க விநாயகம் சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது உடல் திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

துன்பமானாலும், துள்ளலானாலும், தனது குரல் வளத்தால் அவ்வுணர்வுகளை துள்ளியமாகக் கடத்தி விருந்தளித்தவர் என்றும் பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்தவர் வழுவூர் மாணிக்க விநாயகம் என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின் அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.