லெபனான் எல்லைப் பகுதியில் இஸ்ரேல் படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.
கடந்த சில நாட்களாக இரு தரப்பும் ஒருவருக்கு ஒருவர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பு முதலில் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் பகுதிகளில் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்கள் காரணமாக எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையில், லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இஸ்ரேல் சட்டவிரோதமாக வெள்ளை பாஸ்பரஸ் பயன்படுத்தியதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
குறிப்பாக தெற்கு லெபனானில் உள்ள பகுதிகளில் இந்த தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் முக்கிய கடற்படை தளங்களில் ஒன்றான ஹைஃபா கடற்படை தளத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய தரைக்கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த தளம் தாக்குதலுக்குள்ளானது பெரும் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.
மேலும், ஹமாஸ் மற்றும் யேமனில் செயல்படும் ஹவுதி அமைப்புகளும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், ஈரான் சார்பில் ஏவப்படும் ஏவுகணைகள் பிராந்தியத்தில் விழுந்து வருவதாக கூறப்படுவதால், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.

