ITamilTv

Tiruvarur Azhither | ”தேரோட்ட திருவிழாவுக்கு தயாராகும்..” திருவாரூர் ஆழித்தேர்! பக்தர்கள் உற்சாகம் !!

Spread the love

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் ஆழித்தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

சைவ சமய தலங்களில் முதன்மை தலமாகவும் சர்வதோச பரிகார தலமாகவும் விளங்குவது புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில். இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இந்த பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறவிருக்கிறது.அதனை முன்னிட்டு தேரின் கட்டுமான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பிரசித்தி பெற்ற இந்த திருவாரூர் தேர் ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும்.சாதாரணமாக இந்த தேர் 30 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்டது. நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் இதன் எடை 220 டன்னாக இருக்கிறது.இந்த தேரின் சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தேரின் மேல் கட்டுமானம் மூங்கில்கள் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி நடைபெறும்.அதற்கு மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம். அதற்கு மேல் 6 அடி உயரத்திற்கு தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் இந்த தேர் கட்டப்படும்.

அலங்கரிக்கப்பட்ட பின் தேரின் எடை 300 டன் ஆகும்.முன்பகுதியில் 33 அடி நீளமும் 11 அடி உயரமும் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்படும் இந்த நிலையில் இந்த தேரின் கட்டுமான பணிகள் என்பது தற்போது நடைபெற்று வருகிறது.

பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர் அம்பாள் தேர் முருகர் தேர் விநாயகர் தேர் சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் ஐந்து தேருக்கான கட்டுமான பணிகள் என்பது தற்போது நடைபெற்று வருகிறது.இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு பகலாக வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்த தேரோட்டத்தின் போது தேரை நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் 600 முட்டுக்கட்டைகள் தயாரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்த முட்டுக்கட்டைகள் புளிய மரக்கட்டையில் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுமான பணிகள் வரும் மார்ச் 26ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தியாகராஜ சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும்.

உலகப் புகழ்பெற்ற இந்த ஆழித் தேரோட்டத்தை பார்ப்பதற்காக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிவர்.எனவே அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version