கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற அமோக வெற்றியை தொடர்ந்து அக்கட்சியினர் மத்தியிலும், பிஜேபிக்கு எதிரான ஏனைய மாநில கட்சிகள் மத்தியிலும் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ளும் உற்சாகம் எழுந்துள்ளது.
பிஜேபி வீழ்த்த முடியாத கட்சி அல்ல:
காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி பிஜேபி ஒன்றும் வீழ்த்த முடியாத சக்தி அல்ல என்ற நம்பிக்கையை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் பிஜேபியை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பாட்னாவில் வருகிற ஜூன் 12 ஆம் தேதி கூட்ட பிகார் முதல்வர் நிதிஷ் குமார்ஏற்பாடு செய்து வருகிறார்.
இது தொடர்பாக பிஜேபியை எதிர்க்கும் 18 மாநில கட்சிகளுடனும் அவர் பேச்சு வார்த்தையும் நடத்தி முடித்துள்ளார். நிதீஷ் குமார் ஒருங்கிணைக்கும் இந்த கூட்டத்தில் மொத்தம் 24 கட்சிகள் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கெஜ்ரிவால் தலைமையிலானஆம் ஆத்மி கட்சியும், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுள் காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
கடந்த குடியரசு தலைவர் தேர்தலில் பிஜேபிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி , கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு ஆதரவு தந்த பல கட்சிகள் குடியரசு தலைவர் தேர்தலில் தங்களது நிலையை கடைசி நேரத்தில் மாற்றிக் கொண்டன. ஆனால் தற்போது நிலைமை மாறி உள்ளதால் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என்ற கோஷம் வலுத்து வருகிறது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பிஜேபி அறிவித்த உடன் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தான் முதலாவது நபராக அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். காங்கிரசுக்கு எதிராக பிஜேபி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராகும் கனவில் இருந்த நிதீஷ் குமாருக்கு தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் அவரது கனவை சிதைத்து விட்டன. பல பேட்டிகளில் தான் பிரதமர் வேட்பாளராகும் திட்டம் எதுவும் இல்லை என நிதிஷ் குமார் கூறி வந்தாலும் தற்போது கர்நாடக தேர்தலுக்குப் பிறகு நிலைமை சற்று மாறி உள்ளதால் எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக களம் இறங்கும் எண்ணம் நிதீஷ் குமாருக்கு எழுந்துள்ளது. மேலும் நிதீஷ் குமாரை முதன்மை படுத்துவதன் மூலம் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி கூட்டணி அமைந்து விடாமல் தடுக்க முடியும் என்று நினைக்கிறார் மம்தா பானர்ஜி. அதற்காகவே நிதிஷ் குமார் கூட்டம் இந்த கூட்டத்திற்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
தில்லியில் ஆம் ஆத்மி அரசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்துள்ள நிலையில் பாட்னாவில் கூட்டப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சியும் ஆதரவு வழங்கியுள்ளது.
ராகுலை பிரதமராக ஏற்காத கட்சிகள்:
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அதன் நிலை மாறுபட்டதாக இருக்கிறது. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டும் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதில் அக்கட்சி தயக்கம் காட்டி வருகிறது. இருப்பினும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியை காங்கிரஸால் மட்டுமே தனித்து எதிர்கொள்ள முடியாது என்பதை மாநில கட்சிகளும் நன்கு புரிந்து வைத்திருக்கின்றன. அதன் காரணமாகவே பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தாத எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைக்க நிதிஷ் குமாரும், மம்தா முனைப்பு காட்டி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் “பாரத் ஜோடோ ” யாத்திரை காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த கட்ட யாத்திரையை ராகுல் காந்தி தொடங்க உள்ள நிலையில், கர்நாடகாவில் கிடைத்த அமோக வெற்றி காங்கிரசுக்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது. எதிர்வரும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 2 மாநிலங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு காங்கிரசுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
ராகுலுக்கு எதிரே உள்ள சவால்கள்:
2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராக முன்னிலைப்படுத்தாமல் போனால் அவருக்கு பிரதமர் ஆகும் வாய்ப்பு நிரந்தரமாக கை நழுவக் கூடும் என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்தாக உள்ளது.
ராகுல் காந்தியின் புகழில் மாநில கட்சிகள் குளிர் காய நினைக்கின்றன என்றும், நிதீஷ் குமார் தலைமையில் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்தாலும், அதனால் காங்கிரசுக்கு என்ன லாபம் என்பது காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் எழுப்பும் கேள்வியாக உள்ளது.
காங்கிரசின் தமிழக கூட்டணி கட்சிகளைத் தவிர வேறு எந்த மாநில கட்சியும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்ற சூழ்நிலை நிலவி வருகிறது. காரணம் நிதிஷ்குமார் மட்டுமல்லாது , அரவிந்த் கெஜ்ரிவால் , சந்திரசேகர ராவ் ஆகியோருக்கும் பிரதமர் பதவியின் மீது ஆர்வம் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அமைச்சரவையின் பதவியேற்பு விழாவிற்கும் ஆம் ஆத்மி கட்சியும், பாரத ராஷ்டிர சமிதிக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இதேபோல் உத்திரபிரதேசத்தின் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியுடன் எந்தவித கூட்டணியும் கூடாது என்று தில்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அதேசமயம் மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் நிதிஷ் குமாரின் முயற்சியும் அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. மத்தியில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் ஆட்சி மாற்றம் 2024 இல் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று பிஜேபிக்கு எதிரான கட்சிகள் கருதுகின்றன. பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை அகற்றினால் போதும், தேர்தலுக்குப் பிறகு நமக்குள் யார் பிரதமர் என்பதை பின்னர் தீர்மானிப்போம் என்பது மாநில கட்சிகளின் நிலையாக உள்ளது. இதனை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டாலும் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
ஏனென்றால் காங்கிரசுக்கு பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீது முழு அளவிற்கு நம்பிக்கை இல்லை. அனைத்து மாநில கட்சிகளின் கூற்றுப்படி, தேர்தலுக்குப் பிறகு பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கலாம் என்ற முடிவில் காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவை பொறுத்தே மாநில கட்சிகளின் இந்த ஒருங்கிணைப்பு எந்த அளவிற்கு பிஜேபிக்கு எதிராக மாறும் என்பது தெரிய வரும்.