Site icon ITamilTv

காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி – ஒருதலை காதலனின் வெறிச்செயலால் பதற்றம்.

Spread the love

புதுசேரியை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

சன்னியாசிக் குப்பம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரின் 18 வயது மகள் கீர்த்தனா, கலிதீர்த்தால் குப்பம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

மாணவி கீர்த்தனாவை முகேஷ் என்பவர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். முகேஷின் காதல் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளாத கீர்த்தனாவிடம் முகேஷ் அடிக்கடி தகராறு செய்து வந்துளார். ஒருகட்டத்தில், தன்னை தவிர்த்து கீர்த்தனா, வேறு யாரிடமும் பேசக்கூடாது என முகேஷ் மிரட்டியிருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை கல்லூரி முடித்து தனியார் பேருந்து மூலம் வந்த கீர்த்தனா, சன்னியாசிக் குப்பம் கடைவீதியில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, கத்தியுடன் மறைந்திருந்த முகேஷ் கீர்த்தனாவின் கழுத்து மற்றும் கை பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்த கீர்த்தனாவை பார்த்துப் பதறிய அங்கிருந்தவர்கள், உயிருக்கு போராடிய கீர்த்தனாவை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவி கீர்த்தனா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த திருபுவனை போலீசார், கீர்த்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய முகேஷை தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவிகள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் புதுசேரியை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


Spread the love
Exit mobile version