கொரோனா காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் 2021 -22ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் கடந்த மே மாதம் நடைபெற்றது. 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணிகள் கடந்த ஜூன் 2-ல் தொடங்கி 10-ம் தேதி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன.
ஜூன் 20-ம் தேதி தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக வெளியாகின. மாணவர்களின் மதிப்பெண்கள், செல்ஃபோனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்பட்டன. பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.
இந்த தேர்வின் முடிவுகள் கடந்த மாதம் வெளியான நிலையில் மறுகூட்டலுக்கு பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தங்கள் தகவல்களை பயன்படுத்தி மறுகூட்டல் முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மறுகூட்டல் புதிய மதிப்பெண் சான்றிதழும் அன்றைய தினமே அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.