தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த மார்ச் 15ஆம் தேதி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் சூழல் சூடு பிடித்துள்ளது.
இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஏற்கனவே களத்தில் இருக்கும் நிலையில், புதிதாக தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலில் களம் காண்பது மக்களிடையே அதிக ஆர்வத்தை உருவாக்கியுள்ளது.
மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் சுமார் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இதற்காக மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலை சீராக நடத்த ரூ.1,300 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்புடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டன.
பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக 20,000க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், தலைவர்களின் ரோடு ஷோ, வாக்கு சேகரிப்பு என தேர்தல் களம் பரபரப்பாக இருந்தது.
இந்த நிலையில், அனைத்து தேர்தல் பரப்புரைகளும் இன்று மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளன.

