விடைத்தாள் திருத்தும் பணியில் தனியார் பள்ளிகள் தங்களின் ஆசிரியர்களை கண்டிப்பாக அணுக வேண்டும் என தேர்வுத்துறை (examination department) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடந்து வரும் நிலையில், ஏற்கனவே நான்கு பாட தேர்வுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், கடைசி பாடத் தேர்வான சமூக அறிவியல் தேர்வு வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகளும் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட எழுபதிற்கும் அதிகமான மையங்களில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை தேர்வு துறை (examination department) இயக்குனர் திரு சேதுராம வர்மா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ளார்.
அந்த உத்தரவில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் வழியில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தமிழ் வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும், மாற்றுதலாக வேறு ஒரு விடை தாள்களை திருத்துவதில் ஈடுபடக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஆங்கில வழி வகுப்பு ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.
இவர்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் தனியார் பள்ளி ஆசிரியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிக்கான உத்தரவை வரும் 19ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக விடைத்தாள் திருத்தும் பணிகள் தனியார் பள்ளிகள் சரியாக ஒத்துழைப்பது இல்லை என குற்றச்சாட்டுகள் சில ஆண்டுகளாக எழுந்து வரும் நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை அழைக்கும் போது பள்ளி நிர்வாகம் ஒத்துழைப்பதில்லை எனவும் புகார் எழுந்து வரும் நிலையில், தற்போது அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்களுடைய ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும். அனுப்ப தவறினால், அந்த பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுடைய விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், பொறியியல் விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் ஆசிரியர்களை அனுப்பாத நிலையில், கிட்டத்தட்ட 18 கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடியாக நடவடிக்கை எடுத்திருந்தது.
அதன் பிறகு, உயர்கல்வித்துறையின் நடவடிக்கையின் பெயரில் அந்த 18 கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தற்போது பள்ளிகளிலும் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை தேர்வுத்துறை அதிரடியாக எடுத்து உள்ளது.