தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கியதில் எந்த அரசியலும் இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது :
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்-க்கு மத்திய அரசு ‘சிஆர்பிஎப்’ பாதுகாப்பு வழங்கியுள்ளது. மத்திய பாதுகாப்பு நிறுவனங்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் இல்லை. தமிழக அரசு ஏன் அவருக்கு பாதுகாப்பு வழங்கவில்லை.
என்னை இறக்குமதி செய்யப்பட்ட அரசியல்வாதி என திமுக அமைச்சர்கள் கூறியுள்ளனர். திமுகவில் உள்ள சேகர்பாபு உள்ளிட்ட பலர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். கடந்த 2024-ம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு வாக்குகள் 7 சதவீதம் கீழே சென்றுள்ளது. 2026-ம் ஆண்டு 20 சதவீதம் கீழே செல்லும். அவர்கள் எப்படி ஆட்சி அமைப்பார்கள். திமுக அரசை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டனர்.
உணர்ச்சிவசப்படுவது எனது பலம். தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக இரண்டாவது இடத்திற்கு பாஜக வந்துள்ளது. அரசு மருத்துவமனையில் அலட்சியத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து வெளிவந்த செய்திகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் என்ன பதில் கூறுவார். அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபருடன் அவர் இருந்த புகைப்படத்திற்கு இதுவரை விளக்கம் கொடுக்கவில்லை. 2026-ல் சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் இணைந்து திமுக அரசை அகற்றுவார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.