2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தல் முடியும் வரை, கட்சி நிர்வாகிகள் யாரும் யு-டியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது :
கட்சி கட்டுப்பாடு என்பது மிக முக்கியமானது. கட்சி வளர்ச்சி அடையும்போது, முன்னணி தலைவர்கள் இடையே முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். கட்சியில் ஒவ்வொருவரும் கட்டுப்பாடுகளோடு செயல்பட வேண்டும்; அந்த கட்டுப்பாடு, பிறருக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்.
ஆனால், முன்னணி பொறுப்பாளர்களே சமூக வலைதளங்களில், இஷ்டத்துக்கும் பதிவிடுகின்றனர். அது கட்சிக்கும், தலைமைக்கும் களங்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், கடும் மன வேதனையில் இருக்கிறேன். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், கட்சியினரின் செயல்பாடுகள் உள்ளன. கட்சி முன்னணியினரின் செயல்பாடுகளால் காயம்பட்டிருக்கிறேன்.
கட்சிக்குள், ஒருவருக்கு மற்றொருவர் முரண்பாடுகளுடன் இருக்கலாம். அதற்காக, முரண்பட்ட கருத்துகளையெல்லாம் சமூக வலைதளங்களில் பகிர்வது, கட்சிக்கு நல்லதல்ல. அப்படிப்பட்ட கருத்துகளை இனி, கட்சியினர் யாரும் பதிவு செய்யக்கூடாது.
Also Read : பலி தீர்த்த டாக்டர் கனவு – நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை..!!
எல்லா விஷயங்களிலும் கட்சியினர் கவனமாக இருக்க வேண்டும். யு – டியூப் சேனலில் பேச அழைக்கின்றனர் என்றதும், சுய விளம்பரத்துக்காக எதைப் பற்றியும் கவலைப்படாமல் போய் விடக்கூடாது.
பேச அழைப்பவர்கள், என்ன நோக்கத்திற்காக அழைக்கின்றனர் என பார்க்காமல், வாய்ப்பு கிடைக்கிறதே என்று செல்வதும், அங்கு சென்று இஷ்டத்துக்கு பேசுவதும் கவலைக்குரியது. யார் பேட்டிக்கு அழைத்தாலும், கட்சித் தலைமையின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.
என்னை பொறுத்த வரை, வரும் 2026ல் நடக்கவிருக்கும் சட்ட சபைத் தேர்தல் வரை, கட்சி முன்னணியினர், யு – டியூப் சேனல்களுக்கு பேசச் செல்லாமல் இருப்பதோடு பேட்டி கொடுக்காமலும் இருப்பது நல்லது. வாய்ப்பு வந்தாலும் தவிர்க்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.