அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட தவெக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த அருண்குமாரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி நிறைவடைந்தது. தொடர்ந்து, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பரிசீலனை இன்று நடைபெற்றது.
இந்த பரிசீலனையில், சரியான ஆவணங்கள் மற்றும் விவரங்களுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஏற்கப்பட்டன. தவறுகள் இருந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அதன்படி, எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமியின் மனு ஏற்கப்பட்டது. அதேபோல், திமுக சார்பில் போட்டியிடும் காசியின் மனுவும் செல்லுபடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
வேட்புமனு பரிசீலனை நடைபெறும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேட்பாளர்கள் வந்திருந்தனர். தவெக வேட்பாளர் அருண்குமாரும் வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் பின்னர் அவர் அங்கிருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவரது வேட்புமனுவில் வழங்கப்பட்ட தகவல்கள் முழுமையாக இல்லை என்பதனால், அதிகாரிகள் அந்த மனுவை நிராகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

