தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் நிலையில், அங்கு இன்று கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இன்று பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த அவர், அங்கு பிரச்சாரத்தையும் தொடங்கினார். தொடர்ந்து கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளிலும் பிரச்சாரம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பெரம்பூரிலிருந்து கொளத்தூர் செல்லும் வழியில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்று கட்சி தரப்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகாரும் அளிக்கப்பட்டது.
பின்னர் கொளத்தூரில் சிறிது நேரம் மட்டும் பேசிய விஜய், அங்கிருந்து வில்லிவாக்கம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் வெளியிட்ட தகவலில், பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருந்தது என்றும், அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர். வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் பின்னர் வேறு நாளில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

