தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் கட்சியின் வேட்பாளர்களை அறிவித்து அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில், கரூர் தொகுதிக்கான வேட்பாளராக கட்சியின் மாவட்டச் செயலாளர் மதியழகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக கரூரில் நடைபெற்ற விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தற்போது சிபிஐ விசாரணையில் உள்ளது.
அந்த சம்பவம் தொடர்பாக விஜய் டெல்லி சென்று விசாரணைக்கு ஒத்துழைத்திருந்தார். மேலும், அப்போது கைது செய்யப்பட்டு பின்னர் வெளியே வந்த மதியழகனும் இந்த விவகாரத்தில் கவனம் பெற்றவர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய விஜய், அவர்களிடம் நேரில் சென்று அனுதாபம் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில், கரூர் தொகுதியில் மீண்டும் மதியழகனைவே வேட்பாளராக அறிவித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியமான முடிவாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய மதியழகன், தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்டவை என கூறினார்.
மேலும், கரூரில் தங்களுக்கு நல்ல மக்கள் ஆதரவு கிடைத்து வருவதாகவும், இந்த தேர்தலில் வெற்றி பெறும் நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.
விஜய் நேரில் பிரச்சாரம் செய்ய வந்தாலும், வராவிட்டாலும் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பின் மக்களிடம் நேரடியாக சென்று சந்திக்கும் வகையில் செயல்படுவதாகவும், குறிப்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை மறக்காமல் கவனிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

