விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மாணவியின் உடல் இறுதியாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது +2 மாணவி, கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்.
மாணவி காணாமல் போன 24 மணி நேரத்திற்குள், குளத்தூர் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் காயங்களுடன் அவரது உடல் மீட்கப்பட்டது. பின்னர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றவாளியை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை 10 தனிப்படைகளை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியது. பலரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.
பின்னர் ராமநாதபுரத்தை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். டிஎன்ஏ பரிசோதனையிலும் அவர் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.குற்றவாளி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்பது நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு மாணவியின் உடலை குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.

