Site icon itamiltv.com

ரூ.50 ஆயிரம் செலுத்திய 60 பேருக்கு திருப்பி தர மாட்டோம்: தேர்தலில் போட்டியிடாத மநீம விளக்கம்!

விருப்ப மனு கட்டணம் ரூ.50 ஆயிரம் திருப்பித் தரக்கூடியது அல்ல. 60 பேர் கட்டிய விருப்பமனு தொகை கட்சி நிதிக்கு சென்று விட்டது என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்

தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கட்சி சார்பில் விருப்ப மனு கட்டணம் பெறப்படுவது வழக்கம்.

அந்த வகையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் விருப்ப மனு கட்டணம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி மநீம தொண்டர்கள், நிர்வாகிகள் 60 பேர் விருப்ப மனு கட்டணம் செலுத்தினர்.

ஆனால், திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் 3 சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் கட்சியின் சொந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தேர்தலில் கட்சி போட்டியிடவில்லை என்று மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார்.

இதனால், தேர்தலில் போட்டியிடலாம் என்று விருப்ப மனு கட்டணம் செலுத்திய கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த சூழலில், மநீம தேர்தலில் போட்டியிடாததால் விருப்ப மனு கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என்று கட்டணத்தை செலுத்திய நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இதுதொடர்பாக மநீம நிர்வாகிகளிடம் கேட்டபோது, “விருப்ப மனு கட்டணம் என்பது திருப்பித்தரக்கூடிய கட்டணம் அல்ல (Non–refundable) என்பதும் அந்த கட்டணம் கட்சி நிதியாக கருதப்படும் என்பதும் அனைவருக்கும் நன்கு தெரியும்.

அந்த வகையில், தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட 60 பேர் விருப்ப மனு கட்டணம் செலுத்தியிருந்தனர்.

அந்த கட்டணம் கட்சி நிதிக்கு சென்றுவிட்டது. விருப்ப மனு கட்டணம் செலுத்திய எந்த தொண்டரும், நிர்வாகியும் அதை திரும்ப தருமாறு கட்சி தலைமையிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு இதுதொடர்பாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள்” என்று விளக்கம் அளித்தனர்.

Exit mobile version