சென்னையில் கடற்கரை முதல் பரங்கிமலை வரை இயக்கப்படும் எம்ஆர்டிஎஸ் பறக்கும் ரயில் சேவை, தென் சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக உள்ளது. தரமணி, வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளை இந்த சேவை இணைப்பதால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர்.
பரங்கிமலை வரை சேவை நீட்டிக்கப்பட்ட பிறகு ஆதம்பாக்கம் மற்றும் புழுதிவாக்கம் பகுதிகளுக்கும் ரயில் வசதி கிடைத்ததால் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இருப்பினும், தற்போது 20 நிமிட இடைவெளியில் மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
ஒரு ரயிலை தவறவிட்டால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், குறிப்பாக அலுவலக நேரங்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். வேளச்சேரி மற்றும் சேப்பாக்கம் நிலையங்களில் நடைமேடை மாற்றிச் செல்ல வேண்டிய சூழல் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள், எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் பணிகள் முடிந்த பிறகு சேவைகளை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

