தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவுக்கு அதிமுக குறைந்த அளவு தொகுதிகள் ஒதுக்கியுள்ளதால், அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
சட்டமன்ற தேர்தல் 2026
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு சென்னை மயிலாப்பூர் மற்றும் கோவை வடக்கு ஆகிய இரண்டு தொகுதிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
இந்த தொகுதிகளில் முறையே தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அண்ணாமலைக்கு வாய்ப்பு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை களம் இறங்குவாரா?
ஆரம்பத்தில் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அந்த தொகுதிகள் அதிமுகவால் தக்கவைக்கப்பட்டுள்ளன.
மேலும், திருப்பூர் தெற்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வேறு ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி தலைமை ஆலோசனை
பல்லடம் தொகுதியை ஒதுக்க முன்வந்ததாக கூறப்பட்டாலும், கடந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் கிடைத்ததால் அங்கு போட்டியிட அண்ணாமலை விருப்பம் காட்டவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையில், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அண்ணாமலை தலைமையிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், அவரை வலுவான தொகுதியில் களமிறக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து கட்சியின் மேலிடம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
