தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவின் வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்னிறுத்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வில்லிவாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஜி. தேவராஜன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி தேர்தலில் போட்டியிடும் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை படிவம் 26-ல் தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது என கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஆதவ் அர்ஜுனா தனது மனைவி டெய்ஸியின் சொத்துகளை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், டெய்ஸி பல கோடி மதிப்புள்ள நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார் என்றும், அவற்றில் உள்ள சொத்து விவரங்கள் வேட்பு மனுவில் சேர்க்கப்படவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
சில சொத்துகள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தபோதும், அது சரியாக பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
எனவே, அந்த உத்தரவை ரத்து செய்யவும், விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடவும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

