எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 22 பேரை அவர்களின் இரு படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை யாழ்ப்பாணம் மயிலாட்டி மீன்பிடி துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை ஒட்டிய இந்திய பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களை கைது செய்து, அவர்களின் படகுகளை பறிமுதல் செய்தல், கடல் கொள்ளையர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துதல் போன்ற தாக்குதலை இலங்கை நடத்தி வருகிறது. இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை விடுவிக்க கோரி பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
“இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மத்திய வெளியுறவுத்துறை இந்த விவகாரத்தில் தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக நாடு திரும்பவும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.