சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்றவர்களை தாக்கியதாக கூறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்ற இளைஞர், காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெளியான தகவல்களின் படி, ஆகாஷ் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகவும், பின்னர் அவரது கால் உடைந்ததை மறைக்க கீழே விழுந்ததாக போலியான விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையில் அவரது வாக்குமூலம் வெளியாகி, சம்பவத்தின் மீது மேலும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதுபோன்ற காவல் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து முன்னரும் கடும் விவாதங்கள் எழுந்துள்ளன .
ஆகாஷின் உயிரிழப்புக்கு பொறுப்பான போலீசாருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த வழக்கு பெரும் சர்ச்சையாக மாறியதால், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விசாரணைக்கு ஆஜராக டிஜிபி சம்மன் அனுப்பியுள்ளார். ஆனால் சம்மன் வழங்க சென்றபோது, பலர் வீட்டில் இல்லாமல் தலைமறைவாகியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், அவர்களின் இல்லங்களில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக ஆர்வலர் ஹென்றி திஃபேன், காவலர்கள் தப்பிச் சென்றது குறித்து கேள்வி எழுப்பி மாவட்ட எஸ்.பிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு இடைநீக்கம் செய்யப்பட்ட காவலர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.

