தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் (யானை பராமரிப்பாளர்)-ஆக நியமிக்கப்பட்டுள்ள பெள்ளிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் இன்று பணிநியமன ஆணையை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (2.08.2023) தலைமைச் செயலகத்தில், வனத்துறை சார்பில் நீலகிரி மாவட்டம், தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள திருமதி வி. பெள்ளிக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவிலேயே பழமையான யானைகள் முகாம்களில் ஒன்றாக திகழ்கிறது. ஒவ்வொரு யானையும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பாகன் மற்றும் காவடியால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. முகாம்களில் உள்ள யானைகளை தனிகவனத்துடன் அவர்கள் பராமரித்து வருகின்றனர்.
பாகன்கள் மற்றும் காவடிகளின் பணிகளை பாராட்டும் விதமாக தமிழ்நாடு அரசு முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 91 பாகன்கள் மற்றும் காவடிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் வழங்கியுள்ளதோடு, சூழலுக்கியைந்த சமூக இணக்கமான வீடுகள் ரூ.9.10 கோடி செலவில் கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணையும் பிறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது, தற்காலிக யானை பராமரிப்பாளராக பணியாற்றிவரும் திருமதி. வி. பெள்ளி , அனாதையான யானைக் குட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான சேவையை கருத்தில்கொண்டு, தெப்பக்காடு யானைகள் முகாமில் காவடியாக நியமிக்க தமிழ்நாடு அரசால் முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிநியமன ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று மு.க.ஸ்டாலின் இன்று திருமதி வி. பெள்ளிக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, வனத்துறை அமைச்சர் மரு.மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாகு. மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் வன் ஆர். ரெட்டி, திருமதி பெள்ளியின் கணவரும் யானை பராமரிப்பாளருமான பொம்மன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.