மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக சென்னை மற்றும் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை இன்று ஆய்வு செய்ய மத்திய அரசின் குழு தமிழகம் வருகிறது.
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ள பொதுமக்கள் அத்யாவசிய தேவைகளை கூட பெற முடியாமல் தவித்து வருகின்றனர் .
இந்நிலையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக 5,060 கோடி வழங்கிடக் கோரி, பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வந்திருந்தார். பின்னர் முதல் கட்ட நிதியாக 450 கோடியை மத்திய அரசு விடுத்திருந்தது.
இந்நிலையில் வரலாறு காணாத இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களின் பாதிப்பு குறித்து, 6 அதிகாரிகள் கொண்ட மத்திய அரசின் குழு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறது.
இந்த ஆலோசனைக்கு பின், இன்றும் நாளையும் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய அரசின் குழு ஆய்வு செய்ய உள்ளனர்.