இன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை திருவிழா நடைப்பெறுவதால், இன்று கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் மாசி கொடை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இந்த திருவிழாவுக்காக தயராவார்கள். கடந்த மாதம் பிப்ரவரி 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வருகிறார்கள். இந்நிலையில், இன்று மார்ச் 8ம் தேதி செவ்வாய்க்கிழமை மாசிக்கொடை திருவிழாவிற்காக குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ளார்.
இதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அரசின் முக்கிய பணிகளுக்காக தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் மட்டும் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும். இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 9ம் தேதி 2வது சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.