ITamilTv

பாம்பை கடிக்க விட்டு கொலை” – மனைவி மரணத்தில் சிக்கிய கணவர்..!

Spread the love

கேரள மாநிலத்தில் பாம்பு கடித்து இளம்பெண் இறந்த விவகாரத்தில் அதிரடி திருப்பமாக தாலி கட்டிய கணவரே பாம்பு விட்டு கொலை செய்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருமணம்:

கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர் 27 வயதான சூரஜ். தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி 22 வயதான உத்ரா. இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. திருமணத்தின்போது உத்ராவின் பெற்றோர் 784 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு காரை வரதட்சணையாக வழங்கி உள்ளனர்.

இந்நிலையில், சூரஜ் 2வது திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

முதல்தடவை பாம்பு கடித்து உயிருக்கு போராடிய உத்ரா:

கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி, அடூரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு வெளியே உத்ராவை பாம்பு கடித்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர், பல நாட்களாக உயிருக்கு போராடினார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதிதான் உத்ரா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பெற்றோருடன் கொல்லம் மாவட்டம் அஞ்சல் பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்று ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், மே 7ம் தேதி காலை, உத்ரா தனது பெற்றோர் வீட்டில் படுக்கையறையில் பிணமாகக் கிடந்துள்ளார். உத்ராவின் தந்தை விஜயசேனன், தாய் மணிமேகலா ஆகியோர் தங்கள் மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள், உத்ரா விஷ பாம்பு கடித்து இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, படுக்கையறையில் உள்ள ஒரு அலமாரியின் கீழ் விஷப் பாம்பைக் கண்டனர். பாம்பு கொல்லப்பட்டு, அவர்களது வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டது.

திடுக்கிடும் உண்மைகள்:

மே 7ம் தேதி மகள் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக உத்ராவின் பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்தனர்.போலீசார் சூரஜை கைது செய்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் தொடங்கியது.

சூரஜ், வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். மனைவியை கொலை செய்ய அதிக விஷமுள்ள பாம்புகளை கூகுளில் தேடியுள்ளார். பின்னர், பாம்பு பிடிப்பவரான காளுவதிகல் சுரேசை தொடர்பு கொண்டுள்ளார். தனது தொலைபேசியில் பாம்பு பிடிப்பவர்களின் யூடியூப் வீடியோக்களைதான் பார்த்ததாக சூரஜ் ஒப்புக்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், பாம்பு கடியின் முதல் முயற்சி தோல்வியுற்றுள்ளது. அதில் உத்ரா குணமாகி வந்தார். இதை தொடர்ந்து ​​சூரஜ் மற்றொரு விஷப் பாம்பை 10,000 ரூபாய்க்கு வாங்கி உத்ராவின் வீட்டிற்கு கொண்டு சென்று உள்ளார்.

இரவு, மனைவி தூங்கும் போது, ​​சூரஜ் தான் வைத்திருந்த ஜாடியில் இருந்து பாம்பை வெளியே எடுத்து மனைவி மீது வீசி உள்ளார். பாம்பு உத்ராவை இரண்டு முறை கடித்துள்ளது. இதில் உத்ரா மரணமடைந்து உள்ளார். அதிகாலையில் உத்ராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால், சூரஜ் எதுவும் நடக்கவில்லை என்பது போல தனது அறையை விட்டு வெளியே வந்துள்ளார் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மனைவியை கொல்ல கணவர் பயன்படுத்திய பாம்பு
மனைவியை கொல்ல கணவர் பயன்படுத்திய பாம்பு

கடந்த ஆண்டு நடந்த இந்த கொலை வழக்கு கொல்லம் 6-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த குற்றத்தை ‘அரிதிலும் அரிதான வழக்கு’ என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. தண்டனையின் விவரம் வரும் புதன்கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது


Spread the love
Exit mobile version